திரவங்களிலும் வாயுக்களிலும் வெப்பம் கடத்தப்படும் முறையே மேற்காவுகை அல்லது உடன்காவுகை (Convection) எனப்படும். திண்மப் பொருட்களில் வெப்பம் வெப்பக் கடத்தல் மூலமே கடத்தப்படும். இது வெப்பம் கடத்தப்படும் மூன்று முறைகளில் ஒன்றாகும். புவியின் வளிமண்டலம், பெருங்கடல்கள், மூடகம் என்பனவற்றில் மேற்காவுகையானது தாக்கம் செலுத்துகின்றது. இதுவே முகில்கள், இடியுடன் கூடிய மழை ஆகியவை உருவாகவும் காரணமாகும்.
வளிமண்டலம், கோள்களின் மூடகம், பெருங்கடல்கள் ஆகியவற்றில் மேற்காவுகையானது பேரளவில் நடைபெறுகின்றது. இந்த மேற்காவுகையானது சிலவேளைகளில் அவதானிக்க முடியாத அளவிற்கு சிறியதாகவும் சிலவேளைகளில் சூறாவளி போலப் பேரளவிலும் நடைபெறும். ஞாயிறு உட்பட அனைத்து விண்மீன்களினதும் உட்பகுதியிலிருந்து அவற்றின் மேற்பரப்புகளுக்கு மேற்காவுகை மூலமே வெப்பம் கடத்தப்படுகின்றது.